
ஒரு மாதம் முழுவதும் பணிபுரிந்ததன் ஊதியத்தை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பிய இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. எம்.காம் பட்டதாரியான இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பெரியார் நகர் கூட்டு சாலை அருகே வாலாஜாபாத்தில் இருந்து, உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி வெற்றிச்செல்வி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த வெற்றிச்செல்வி லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் பத்து மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் தலையின் ஒருபகுதி முழுவதும் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெற்றிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தைக் கண்ட அப்பகுதியினர் லாரி ஓட்டுநரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உயிரிழந்த வெற்றிச்செல்வி உடலை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.