
அமானுஷ்ய சக்தி மூலம் நோயைக் குணப்படுத்துவதாக கூறி 14 வயது சிறுமியை காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்திரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14வயது சிறுமியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் டெல்லியில் கூலி வேலை செய்வதால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சிறுமி வசித்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பாட்டி, ராம் ஸ்நேஹ் என்ற தந்திரியிடம் அழைத்துச் சென்றார். சிறுமியின் நோய்க்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட தடை இருப்பதால், அவளை வைத்து காட்டில் சடங்கு செய்ய வேண்டும் என்று தந்திரி கூறியுள்ளார். இதை நம்பி சிறுமியை தந்திரியுடன் பாட்டி அனுப்பி வைத்தார். இதன் பின் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது, காட்டிற்கு அழைத்துச் சென்ற தந்திரி, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார். அத்துடன் இதை வெளியே சொன்னால் தன்னிடம் உள்ள அமானுஷ்ய சக்தி மூலம் குடும்பத்தைக் கொன்று விடுவதாக கூறி பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால், தான் கர்ப்பமானதாக சிறுமி கூறினார்.
அத்துடன் தன் கர்ப்பத்தை கலைக்க தந்திரி மருந்து கொடுத்தார். அதனால் தன் உடல்நலன் பாதிக்கப்பட்டதாக சிறுமி கூறினார். இதைக் கேட்டு பாட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்திரி ராம் ஸ்நேஹை தேடி வருகின்றனர். அத்துடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹமிர்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.