
குஜராத் மாநிலம் சூரத்தில் சாதனா நிகேதன் என்ற மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஜசோதா கோகாரி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அவர் தனது வகுப்பில் படித்து வரும் சிறுமியை கன்னத்திலும் அறைந்தும், முதுகில் அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.
சுமார் 35 முறை அந்த ஆசிரியை சிறுமியை அறைகிறார். இந்த கொடுமை அந்த வகுப்பறைக்குள் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் ஆசிரியை ஜசோதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து, குழந்தையை துன்புறுத்திய ஆசிரியை உடனடியாக பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த குஜராத் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிரஃபுல் பன்ஷேரியா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளதோடு, இதுதொடர்பாக அந்த ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒருபோதும் இம்மாதிரியா செயல்களை குஜராத் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி தலைமையிலான விசாரணை குழு பள்ளிக்கு சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மழலையர் பள்ளியில் குழந்தை தாக்கப்படும் காட்சி குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...