
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கார்க்கேவின் மகன் பிரியங் கார்க்கே மீது சனாதனம் குறித்து பேசிய தொடர்பான வழக்கினை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னையில் கடந்த 2ம் தேதி நடந்த தமுஎகச சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‘’கொரனா, டெங்கு வைரஸ் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது. உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் கார்க்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்க்கே உதயநிதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மீதும், அவரது கருத்தினை ஆதரித்த கர்நாடக அமைச்சர் பிரியங் கார்க்கே மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எந்த வழக்காக இருந்தாலும் முறையான வழிமுறைகளை பின்பற்றியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உரிய வழிமுறைகளுடன் திங்கட்கிழமை முறையிடுமாறும் உத்தரவிட்டார்.