
பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது ஓடிக்கொண்டிருக்கும் டிராக்டரில் ஏற முயன்ற வாலிபர் ஒருவர், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தின் ஃபத்தேகர் சுரியன் தொகுதியில், சார்சூர் கிராமத்தில் உள்ளூர் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 29 வயதான சுக்மந்திப் சிங் என்பவர், ஓடும் டிராக்டரில் ஏறும் சாகச நிகழ்ச்சியை செய்ய முயன்றார். ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் ஒரு சக்கரத்தின் மீது காலை வைத்து, டிராக்டரில் ஏறி, பின்னர் அதனை நிறுத்துவது, சாகச நிகழ்சியின் முக்கிய அம்சமாகும்.
இதற்காக சுக்மந்திப் டிராக்டரில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த சேறு காரணமாக டிராக்டரின் சக்கரத்தில் அவரது கால் சிக்கியது. இதையடுத்து அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனிடையே இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி, இது போன்ற ஆபத்தான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றதே, இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.