காவல் துறையால் மகனுக்கு நடந்த கொடுமை... கண்ணீருடன் முறையிட்ட தாய்: அதிரடி காட்டிய மனித உரிமை ஆணையம்

மாநில மனித உரிமை ஆணையம்
மாநில மனித உரிமை ஆணையம்

இளைஞர் ஒருவரை காவல் துறையினர் துன்புறுத்தியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அவருக்கு ரூ.2.90 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “என்னுடைய மகனின் படிப்பிற்காக பல்லாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்திருந்தேன். அவர் அங்குத் தங்கிப் படித்து வந்த நிலையில், மாடியிலிருந்து என்னுடைய மகன் கீழே விழுந்தார். இதனால் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறை அவரை அழைத்திருக்கிறார்கள். மேலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அவரை துன்புறுத்தினார்கள்.

மேலும் அவரை மூன்று வெவ்வேறு லாட்ஜ்களில் வைத்து காவல் துறையினர் மிரட்டி, ஆபாசமாகப் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்குக் காரணமான பழவந்தாங்கல் பெண் காவல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், “இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 2,90,000 ரூபாயை 8 வாரக் காலத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை பழவந்தாங்கல் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். மேலும், “சமூகத்திலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலாத மக்களிடம் காவல் துறையினர் அதிகாரத்தைக் காட்டக்கூடாது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்கள் குற்றவாளிகளாக ஆகாத வகையில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in