
மும்பையில் ஓடும் காரில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்ஸி டிரைவராக பணியாற்றும் பிரகாஷ் பாண்டே என்ற இளைஞர் திங்களன்று மும்பையின் மலபார் ஹில்ஸ் பகுதியில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கே பெரியவர்கள் துணையின்றி தனியே இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். மாற்றுத்திறனாளியான அந்த சிறுமி பெற்றோருக்காக காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பெற்றோரிடம் அழைத்து செல்வதாக கூறி தனது காரில் சிறுமியை ஏற்றிய பிரகாஷ் பாண்டே, தாதர் நோக்கி காரை செலுத்தி இருக்கிறார். அங்கு லாட்ஜ் ஒன்றை நடத்தும் தனது நண்பன் சல்மான் ஷேக் என்ற மற்றொரு இளைஞன் காரில் ஏறிக்கொண்டான். மால்வானி நோக்கிய கார் பயணத்தின்போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த சிறுமியை சல்மான் ஷேக் பாலியல் பலாத்காரம் செய்தான்.
சிறுமி கதறியதை அடுத்து, மால்வானி பகுதியில் சிறுமியை இறக்கிவிட்டு விட்டு, இரு இளைஞர்களும் டாக்ஸியுடன் தலைமறைவானார்கள். அதற்குள் தங்கள் மகளைக் காணவில்லை என மலபார் ஹில் பகுதியி மாற்றுத்திறனாளி சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
மால்வானி பகுதியில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து, டாக்ஸியின் தடத்தை சிசிடிவி தடயங்கள் வாயிலாக பின்னோக்கி போலீஸார் ஆராய்ந்தனர். இதன் மூலம் சிறுமியை கடத்த பயன்படுத்தப்பட்ட டாக்ஸியை அடையாளம் கண்டனர். பின்னர் அதன் மூலம் டாக்ஸி டிரைவர் பிராகாஷ் பாண்டே மற்றும் சல்மான் ஷேக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.