மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

மகனின் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வேதனையில் தாயும், மகளும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ள உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18). கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி சூளகிரி அருகே நடந்த விபத்தில் சிக்கிய கிரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 7-ம் உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த நிலையில் இருந்த மீனாட்சி மற்றும் காவ்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்க முயன்றனர். அதற்குமீனாட்சியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மீனாட்சியும், காவ்யாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் காண்பிக்குமாறு கூறியும், அதைக் காட்டவில்லை. இதனால்தான் மீனாட்சி, காவ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கிரி வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் சமாதானமடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தற்கொலைக்கு முன்னர் காவ்யா எழுதிய 2 பக்க கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in