'என் அம்மா வாழ்க்கையை கெடுத்துட்டியே'... தந்தையின் 2வது மனைவியை வெட்டிக் கொலை செய்த மகன்!

ரவிக்குமார்
ரவிக்குமார்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தந்தையின் 2-வது மனைவியை மகன் தீர்த்து கட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த வீடு.
கொலை நடந்த வீடு.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்பாண்டி. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மனைவி பழனியம்மாள். இந்த தம்பதிக்கு கருப்பையா (30), ரவிக்குமார் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கணவரை இழந்த ஜோதி (40) என்பவருடன் வேல்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு  முன்பு வேல்பாண்டி ஜோதியை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வேல்பாண்டி, ஜோதியுடன் கேரள மாநிலத்துக்கு சென்றார். 

மருத்துவமனைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
மருத்துவமனைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

மணலாத்துக்குடிசை கிராமத்தில் பழனியம்மாள் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் ரவிக்குமார் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் வசித்து வந்த வேல்பாண்டி- ஜோதி தம்பதியினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு வந்தனர்.

அங்கு உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்தனர். இவர்கள், இங்கு வசிப்பதை கேள்விப்பட்ட வேல்பாண்டி மகன் ரவிக்குமார் நேற்று மதியம் தென்னந்தோப்புக்கு சென்றார். 

அங்குள்ள வீட்டில் ஜோதி மட்டும் தனியாக இருந்தார். அவரைக் கண்டதும் ரவிக்குமார், 'என் அம்மா வாழ்க்கையை கெடுத்து விட்டு நீ மட்டும் சந்தோசமாக வாழ்கிறாயா?' என்று கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் கழுத்து மற்றும் தலையில் வெட்டுப்பட்ட ஜோதி அலறினார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு, தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த வேல்பாண்டி ஓடி வந்தார். அப்போது ஜோதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்து தப்பியோட முயன்ற ரவிக்குமாரை, அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸார், இறந்த ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் 2-வது மனைவியை தொழிலாளி தீர்த்து கட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in