மாமியாரின் திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட மருமகன், குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் குருசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆரோவில் அருகே உள்ள குமரன் நகர், சேரன் வீதியில் உள்ள தனது மாமியாரின் வீட்டின் எதிரே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் நாய்களை வளர்த்து விற்பனை செய்து வந்தார்.
இவரது மாமியார் கோமதி (40) க்கும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய ரகசிய உறவு இருந்து வந்துள்ளது. அதனால் கோமதியின் வீட்டுக்கு தேவா அடிக்கடி வந்து செல்வாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி ரம்யாவுடன் புதுச்சேரிக்கு சென்று ஜெயிலர் திரைப்படம் பார்த்துவிட்டு முகுந்தன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது மாமியார் வீட்டில் தேவா இருந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த முகுந்தன் தேவாவிடம் இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் முகுந்தன் வீட்டுக்கு வந்த தேவா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனின் வயிறு, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்திய தேவா அங்கிருந்து தப்பி ஓடினார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனைவி ரம்யாவின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுந்தன் சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆரோவில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார், முகுந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தேவாவை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.