
80 லட்ச ரூபாய் சொத்துக்காக தனது தந்தையை இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவம் மொராதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அம்ரோஹாவைச் சேர்ந்தவர் சித்து. இவர் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அவரது மகன் கபீர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கபீர், பணம் கேட்டு அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது தந்தையின் 80 லட்ச ரூபாய் சொத்தை அடைவதற்காக அவரைக் கொலை செய்ய கபீர் திட்டமிட்டார். இதற்காக சுவிந்திரா, பிரத் ஆகிய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். தனது தந்தையைக் கொன்றால் 80 லட்ச ரூபாய் சொத்து கிடைக்கும் என்றும், அதில் இருந்து உங்களுக்கு 3 லட்ச ரூபாய் தருகிறேன் என்று கபீர் நம்பிக்கையூட்டியுள்ளார்.
இந்த நிலையில், கைலாசா சாலையில் சித்து நேற்று மாலை இறந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய பக்பரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சித்துவின் மகன் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து சித்துவை கொலை செய்தது தெரிய வந்தது.
அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். சொத்துக்காக தனது தந்தையை நண்பர்களின் உதவியோடு மகன் கொலை செய்த சம்பவம் மொராதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.