நடிகர் விமல் மீது சிங்கார வேலன் பகீர் புகார்: இரண்டு பேருக்குள் நடப்பது என்ன?

நடிகர் விமல் மீது சிங்கார வேலன் பகீர் புகார்: இரண்டு பேருக்குள் நடப்பது என்ன?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கார வேலன் இன்று நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளார். அதில், களவாணி பட நடிகர் விமல் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். திருப்பூர் கணேசன் என்பவர் தயாரித்து பாதியில் நின்ற `மன்னர் வகையறா' என்ற திரைப்படத்தை தொடர்ந்து எடுப்பதற்காக பணம் தேவைபட்டது. அதன் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை தனது நண்பர் கோபி என்பவர் மூலம் கடன் வாங்கி கொடுத்தேன். இந்த நிலையில் களவானி திரைப்படத்தின் விநியோக உரிமையை தருவதாக கூறி தன்னிடம் நடிகர் விமல் மேலும் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் களவாணி திரைப்படம் விநியோக உரிமை வழங்கப்படவில்லை. நடிகர் விமலிடம் தொடர்ந்து பணம் கேட்டதின் பேரில் தான் அளித்த பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து 2.70 கோடி காசோலை கொடுத்தார். ஆனால் அந்த காசோலை உரிய பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆகிவிட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கில் இருந்து திசை திருப்புவதற்ககாவே என் மீதும், கோபி மீது பொய்யான புகாரை நடிகர் விமல் அளித்துள்ளார். எனவே நடிகர் விமல் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிங்காரவேலன், "நடிகர் விமல் நடித்த நேற்று இன்று, புலிவாள், இஷ்டம், அஞ்சலை, ஜன்னல் ஓரம், உள்ளிட்ட 8 படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனது. விமலை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தெரு கோடிக்கு வந்துள்ளனர்.

அதனால் தற்பொழுது தயாரிப்பாளர்கள் நடிகர் விமலை வைத்து படம் எடுக்க முன்வருவதில்லை. மேலும் நடிகர் விமலுக்கு நான் பணம் ஏதும் தரவேண்டியதில்லை. விமல் தான் எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் தரவேண்டும். என் மீது விமல் சுமத்திய குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை. குறிப்பாக A3 பிலிம்ஸ் நிறுவனம் முழுக்க முழுக்க விமலால் தொடக்கப்பட்டதாகும். மன்னர் வகையறா படத்திற்காக விநியோகஸ்தர்கள் அளித்த பணம், அந்த நிறுவன வங்கி கணக்கில் வந்தது. விநியோகஸ்தர்கள் அளித்த பணத்தை திரையிடுவதற்கான செலவுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு அதற்கான ரசீதுகளை நடிகர் விமலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்தவித மோசடியும் நடைபெறவில்லை. என்னுடைய தரப்பில் அதற்கான முழு ஆதாரங்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளேன்.

நடிகர் விமலுடன் வந்த வழக்கறிஞர் இன்பன்ட் தினேஷ் என்மீது பல மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். வழக்கறிஞர் இன்பன்ட் தினேஷ் பற்றி சினிமா வட்டாரத்தில் கேட்டால் அவர் யார் என்று சொல்வார்கள். நடிகர் விமல் மீது வழக்கு தொடரவேண்டி வழக்கறிஞர் தினேஷ்சிடம் சென்றேன். அவர் என்னிடம் பணம் பெற்று கொண்டு நடிகர் விமலுக்கு ஆஜரானார். இது வழக்கறிஞர் தொழிலுக்கு எதிரானது. எனவே வழக்கறிஞர் தினேஷ் மீது பார்கவுன்சிலில் முறையாக புகார் அளித்துள்ளேன். அதற்கான ஆவணம் உள்ளது. நடிகர் விமல் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவர். உதாரணத்திற்கு ஆழ்வார் திருநகரில், கட்டப்படாத இடத்தில் வீடு கட்ட வங்கியில் 70 லட்சம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தினால் எது உண்மை என்று தெரிவரும்" என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in