
குடிபோதையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நெடும்பாசேரியில் பேக்கரி உள்ளது. இதன் உரிமையாளர் குஞ்சுமோன். அவரது மனைவி எல்பி, மகள் மெரின், உதவியாளர் பைஜூ ஆகியோர் நேற்று இரவு பேக்கரியில் இருந்தனர்.
அப்போது அங்கு நெடும்பாசேரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கட்டுப்பாடு அறை வாகனத்தின் பொறுப்பாளரான எஸ்.ஐ சுனில் குமார் வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
குஞ்சுமோன் கடையில் பிரட் வாங்க வந்த வாடிக்கையாளரை எஸ்.ஐ சுனில் குமார் லத்தியால் தாக்கியுள்ளார். இதைத் தடுத்த குஞ்சுமோன், அவரது மனைவி, மகள், உதவியாளர் ஆகியோரையும் எஸ்.ஐ சுனில் குமார் லத்தியால் சரமாரியாக தாக்கினார். இதைத்தடுக்க வந்த பொதுமக்களையும் அவர் தடியால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எஸ்.ஐயை சுற்றி வளைத்தனர்.
அத்துடன் நெடுவாசல் போலீஸாருக்கு தகவல் அளித்து எஸ்.ஐ.யை அங்கமாலி தாலுகா மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சுனில் குமார் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.ஐ சுனில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.