
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதலில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறை மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து உடல்நலனைக் காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றமும் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்தது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு. ஆனால், உச்சநீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை அக்டோபர் 30-ம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா என்பது தெரியவரும்.