
கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் சென்றுள்ள நிலையில், கோவை நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம், கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த இமெயிலில் பாஜக அலுவலகம், மோடி ஒழிக என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு கோவை முழுவதும் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் உட்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை பா.ஜ.க அலுவலகத்தில் இரவு போலீஸார் சோதனை மேற்கொண்டதுடன், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கபட்டுள்ளது. இதனிடையே அந்த இமெயில் குறித்து போலீஸார் விசாரித்த போது, மிரட்டல் கடிதம் வந்த மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.