
நவம்பர் 15ம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தேதி மற்றும் பாதை ஆகியவற்றை இறுதிசெய்து அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய நிலையில், அதற்கு தமிழக போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. உயர் நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று (நவ.06) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் பேரணி கேட்டுள்ள தேதிகளில் சம்பந்தப்பட்ட இடங்களில் சில மத அமைப்புகள் ஏற்கெனவே அவர்களது பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நேரத்தில் தேவையில்லாத மோதல்களை அரசாங்கம் விரும்பவில்லை. அவர்களுக்கு வேறு தேதி கேட்டால் அனுமதி கொடுப்பது தொடர்பாக நாங்கள் பரிசீலிக்கிறோம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கு ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ’’நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 ஆகிய இரண்டு தேதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணியை நடத்த பரிசீலிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வரும் 15ம் தேதிக்குள் பேரணிக்கான தேதி மற்றும் பாதை ஆகியவற்றை இறுதிசெய்து அனுமதி கொடுக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.