ரூ.487 கோடி மோசடி: நிலக்கரி இறக்குமதி நிறுவன இயக்குநர் கைது

நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரி
நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரி

அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்று ரூ.487 கோடி மோசடி செய்ததாக இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரியை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.487 கோடி மோசடி செய்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்ற சதியில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதற்காக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாய் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

சட்டவிரோதமாக மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்து அதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 557 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியது.

அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரியை தற்போது அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அகமது புகாரி சொந்தமாக தூத்துக்குடியில் முத்தியரா மின் நிலையத்தை உருவாக்கி மின் உற்பத்தி செய்து வருகிறார். தமிழகத்திற்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 10% இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்வதாக அகமது புகாரி நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவின் முன்னிலை நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் அகமது புகாரி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டது தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in