இரவு முழுவதும் விசாரணை, காலையில் உயிரிழப்பு: ரவுடி விவகாரத்தில் நடந்தது என்ன?

உயிரிழந்த ரவுடி விக்னேஷ்
உயிரிழந்த ரவுடி விக்னேஷ்

காவல் நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு ரவுடி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ள நிலையில், சந்தேக மரணம் என்பதால் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்றிரவு தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருவர் இருந்தது தெரியவந்தது. உடனே போலீஸார் அவர்களை சோதனை செய்த போது இடுப்பில் ஒரு அடி நீலமுள்ள பட்டாக்கத்தி மற்றும் 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28) என்பதும், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (25) என்பதும் தெரியவந்தது.

பெயிண்டர் வேலை செய்து வரும் ரமேஷ் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் குதிரை ஓட்டி வந்த விக்னேஷ் மீது மெரினா, பட்டினம்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 7.30 மணியளவில் தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, ரவுடி விக்னேஷிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே போலீஸார் விக்னேஷை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஏற்கெனவே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ்
ரமேஷ்

இந்நிலையில் ரவுடி ஒருவர் காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து இணை ஆணையர் பிரபாகரன் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் நேரடியாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு சென்று ரமேஷிடம் விசாரணை நடத்தியதோடு, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரவுடி மரணம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

உயிரிழந்த ரவுடி விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் ரவுடி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in