
பிரபல ரவுடி மதுரை பாலாவை கேரளாவில் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாலா (எ) மதுரை பாலா. ஏ+ கேட்டகரி ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்தில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலைச் செய்வதில் கைதேர்ந்தவர்.
மயிலாப்பூர் ரவுடியான சிவகுமார் உட்பட பல பேருக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து கொலைச் செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரண் அடைவதை பாலா வாடிக்கையாக செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலா மற்றும் அவரது கூட்டாளியான சிவா, மதன் ஆகிய 3 பேரை ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்த போது, தமிழக காவல்துறை தொடர்ந்து தங்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை, கால் உடைக்கப்பட்டலோ அல்லது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு முக்கிய காரணம் தமிழக காவல்துறையினர் தான் என மதுரை பாலா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ரவுடி மதுரை பாலாவை போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, நீதிமன்றத்திலே ஒரு கும்பல் மதுரை பாலாவை கொலைச் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி மதுரை பாலா, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
மேலும் கேரளாவில் இருந்த படியே தொழிலதிபர்களை மிரட்டி பணப்பறிக்கும் செயலில் மதுரை பாலா ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று கேரளா மாநிலம் முரிங்கூர் அருகே வைத்து அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் மதுரை பாலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதுரை பாலாவை சென்னை அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.