ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கட்ராமன்
கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கட்ராமன்

சென்னையில் பிரபல ரவுடி நேற்று இரவு 5 பேர் கொண்ட மர்மக்கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வெங்கட்ராமன் ( 24). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி , அடிதடி உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு வெங்கட்ராமன் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ஏற்கெனவே காத்திருந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல்,ரவுடி வெங்கட்ராமனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கட்ராமன், அந்த கும்பலைத் தாக்க முயன்றார். இதனால் பதிலுக்கு அந்த கும்பல் கத்தியால் வெங்கடராமனை வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதனால் உயிருக்குப் பயந்து வெங்கட்ராமன் அங்கிருந்து ஓடிய போதும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்றது. அப்போது வெங்கட்ராமன் சாலையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அந்த கும்பல் கத்தியால் ரவுடி வெங்கட்ராமனை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது. இதில் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காசிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார், ரவுடி வெங்கட்ராமன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காசிமேடு போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெங்கட்ராமனுக்கும், மர்மக்கும்பலுக்கும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர் வருகின்றனர். ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in