3-வது நாளாக தொடரும் சோதனை... எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் பரபரப்பு

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அவருக்குச் சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் அமைச்சரின் வீடு, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை அலுவலகம், கிரானைட் குவாரி, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான அருணை கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் வெங்கட் என்பவரது வீடு மற்றும் அலுவலகம், அமைச்சரின் மகன் கம்பன் வீடு உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.

3வது நாளாக வருமானவரித்துறை சோதனை
3வது நாளாக வருமானவரித்துறை சோதனை

இதில், பல்வேறு டிஜிட்டல் தரவுகள், வங்கிப் பணப் பரிமாற்றம், கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் வெங்கட் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீடு, அவர்களது மகன் ராமுக்குச் சொந்தமான உணவு மற்றும் கட்டுமான நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ள கட்டுமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூரில் தொடரும் சோதனை
சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூரில் தொடரும் சோதனை

இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை உட்பட 40 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in