
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில் தன் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்திய இளைஞரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபிலுள்ள ஜோகி சீமா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19. இவருக்கும் நியூசான்ட் நகரைச் சேர்ந்த சாஹில் ஷர்மா (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணமாகி ஐந்தே மாதங்களில் மேஹாக், மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் . பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார். அவரிடம் எப்போதும் சாஹில் சண்டை போடுவாராம். தன்னை அவர் மோசமாக நடத்துவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் தன் தாயிடம் பலமுறை சொல்லி மேஹாக் அழுதுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தன் தாயிடம் தினமும் அலைபேசியில் பேசும் மேஹாக், ஞாயிற்றுக்கிழமை அழைக்கவில்லை. இதனால் மகள் பிஸியாக இருக்கலாம் என எண்ணிய மதுபாலா, மறுநாள் திங்கள்கிழமையும் மகள் அழைக்காததால், லண்டனில் வாழும் தங்கள் உறவினர் ஒருவரை அழைத்து, மகளைப் போய் பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
அப்போதுதான் மேஹாக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி கிடைத்துள்ளது. மேஹாக்கை கொலை செய்த சாஹிலை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளதாக அந்த உறவினர் தெரிவித்துள்ளார். தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு துடிதுடித்துப் போயிருக்கும் தாய் மதுபாலா, உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தன் மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.