மருத்துவ கவுன்சிலை விசாரிக்க தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ கவுன்சிலை விசாரிக்க தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் ஆர்.சண்முகம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது அப்துல்லாவுக்கு தனியார் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது மனைவி சகிலால்பானு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தை நாடவும், தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து முகமதுஅப்துல்லாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ஆண்டு மருத்துவ தொழில் செய்ய தடை விதித்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சகிலால்பானு வழக்கு தொடர்ந்து, அதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் சேர்த்துள்ளார்.

மருத்துவர்கள் கவனக்குறைவு தொடர்பாக புகார் வந்ததும் விசாரணை நடத்தப்பட்டு அதிகாரத்துக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒரு ஆண்டு தொழில் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகும் இழப்பீடு வழங்கில் மருத்துவ கவுன்சிலை சேர்த்தது சட்டவிரோதம். எனவே, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், " தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி புகார் வந்ததும் முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதற்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். இதையடுத்து, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்பாக விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in