கொடுங்கையூரில் விசாரணைக் கைதி சந்தேக மரணம்: அடுத்தடுத்து நிகழும் லாக்-அப் மரணங்களால் அதிர்ச்சி!

விசாரணைக் கைதி ராஜசேகர்
விசாரணைக் கைதி ராஜசேகர்

தமிழகத்தில் சமீப காலமாக அடிக்கடி நிகழும் காவல் நிலைய மரணங்கள் சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கின்றன. ஏப்ரல் 19-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, முந்திரி தோப்பு, பேட்டைகாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகள், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகள், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகள், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் என மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகரை நேற்று கொடுங்கையூர் போலீஸார் வழக்கு ஓன்றின் விசாரணைக்காக அழைத்து வந்து லாட்ஜில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவரை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அவருக்கு இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸார் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ராஜசேகரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதி சந்தேக மரணத்தைத் தொடர்ந்து சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜசேகரிடம் விசாரணை நடத்தியவர்கள் யார் யார், எப்போது அவர் அழைத்து வரப்பட்டார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in