விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பாதுகாப்பு பணிக்கு பைக்கில் சென்ற காவலர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரன். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சோதனை சாவடி பாதுகாப்பு பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இன்று மாலை நரிக்குடி அருகே உள்ள மறையூர் பாலத்தின் வளைவில் காவலர் ராஜேஸ்வரன் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கிய ராஜேஸ்வரன் தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான ராஜேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே ஆயுதப்படையில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரன் சில மாதங்களுக்கு முன்புதான் காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் கடந்த 6 நாட்களுக்கு முன் தான் நரிக்குடி காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காவலர் ராஜேஸ்வரன் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.