![பாலியல் வன்கொடுமை](http://media.assettype.com/kamadenu%2F2023-03%2F12869087-e806-4709-b9fb-173848bef412%2F11.jpg?rect=0%2C0%2C700%2C394&w=480&auto=format%2Ccompress&fit=max)
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா(40) இவர் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகில் உள்ள கீழ்க்கோட்டை சின்னக்குளம் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் பங்குதந்தையாக உள்ளார். கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே தேவாலயத்திற்கு அடிக்கடி பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம்.
அப்போது அந்த பெண்ணோடு மிகவும் நெருக்கமாகப் பழகிய வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்துவந்து உள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணிடம் இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் அவரும் வெளியில் சொல்லாமல் இருந்துவந்தார். இந்தநிலையில் ஒருகட்டத்தில் போதகரின் தொல்லை தாங்கமுடியாமல் இதுகுறித்து அந்த இளம்பெண் தன் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.
அந்த இளம்பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருக்கும்போது இருந்தே பங்குதந்தை பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பங்குதந்தை வினோத் ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.