ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கொலை செய்த கிரீஷ்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கொலை செய்த கிரீஷ்.

ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.

கொலை செய்யப்பட்ட  ஹூப்ளி கல்லூரி  மாணவி நேஹா
கொலை செய்யப்பட்ட ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அதே போல ஒரு கொடூரக் கொலை, ஹூப்ளியில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா(20). இவரை கிரீஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதையறிந்த அஞ்சலியின் குடும்பத்தினர் கிரீஷை கண்டித்துள்ளனர். இந்த நிலையில், அஞ்சலியை மைசூரு வருமாறு கிரீஷ் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அஞ்சலியின் பாட்டி கங்கம்மா, காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேஹாவிற்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்படும் என்று அஞ்சலியை கிரீஷ் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அஞ்சலி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கிரிஷ் கத்தியோடு உள்ளே புகுந்தார். அவரது குடும்பத்தினர் முன்பாகவே அஞ்சலியை அவர் சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்டிகேரி போலீஸார், விரைந்து சென்று அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த கிரீஷை போலீஸார் தேடி வருகின்றனர். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in