கழிப்பறையில் தனக்குத் தானே பிரசவம்... குழந்தை சாவுக்கு காரணமான செவிலியர் சிறையில் அடைப்பு!

வினிஷா
வினிஷா

தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையின் கால்கள் துண்டிக்கப்பட்டு  அதன் சாவுக்கு காரணமான செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  வினிஷா ( 24). சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை தி.நகர் சவுத்போக் ரோட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் நெருக்கமாக பழகி வந்தனர். 

இதனால் கருத்தரித்த வினிஷா, கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனினும் இது குறித்து பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டு சென்னையில் தனியாகவே இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 30-ம் தேதி திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு செல்ல விரும்பாத அவர்,  தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். 

கழிப்பறைக்குச் சென்று குழந்தை பிறப்புக்கான முயற்சிகளில் சுயமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் சிசுவை அதன் கால்களை பிடித்து வெளியே இழுக்க முயற்சித்தபோது  கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வந்துவிட்டது. அதனால்  குழந்தை இறந்தது. 

பின்னர் குழந்தையின் கால்களை கழிவறையில் வீசிவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை  இறந்திருப்பதை உறுதிசெய்தனர். அதன்பின்னர் வினிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீஸார், செவிலியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினிஷாவை  கொலை வழக்கு உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in