நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆகியோர் சென்னை என்ஐஏ அலுவலகத்தில் சற்று முன் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் எல்டிடிஈ அமைப்பினருடன் உள்ள தொடர்பு குறித்தும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணம் திரட்டியது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கடந்த 2022 மே 19-ம் தேதியன்று பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மென்பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, செட்டிச்சாவடி பகுதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் துப்பாக்கி தயாரிக்க உதவிய அவர்களது நண்பரான அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்தனர். இதன் பின் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணையைத் தொடங்கியது. அப்போது இவர்கள் அனைவரும் எல்டிடிஈ இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இணைந்து சதிச்செயலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக எழுந்த சந்தேகத்தில் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உட்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதில், திருச்சியில் உள்ள நாம் தமிழர் அமைப்பின் முக்கிய நிர்வாகியான துரைமுருகன், தென்காசியைச் சேர்ந்த இசைமதிவாணன் ஆகியோரும் அடக்கம்.
சோதனையைத் தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அளித்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இசைமதிவாணன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவர்களுடன் வழக்கறிஞர்களும் என்ஐஏ அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் விசாரணை மட்டுமே நடத்தப்பட உள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் எல்டிடிஈ அமைப்பினருடன் உள்ள தொடர்பு குறித்தும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணம் திரட்டியது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!