
தூத்துக்குடியில் 3 தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தையை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் ( 23) , தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரிச்செல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்து வரும் முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
கார்த்திகாவும், மாரிச்செல்வமும் ஒரே சமூத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், கார்த்திகாவின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிசெல்வம், கார்த்திகா காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர கார்த்திகாவின் பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், காதலில் உறுதியாக இருந்த இளம் ஜோடி, தேவர் ஜெயந்தி அன்று திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
அதே நேரத்தில் மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் திருமணத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் இருவரையும் தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு மாரிச்செல்வம் வீட்டுக்கு வந்த பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் காதல் ஜோடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீஸார் இன்று கைது செய்தனர். உறவினர்கள் கருப்பசாமி, பரத் ஆகிய மூன்று பேர்கள் மீது சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!
திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!
சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!
இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!
குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!