
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஸ்மார்ட் போன் வாங்க பணம் தராததால், தாயை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் கமலாபாய் குலாப்ராவ் பத்வைக் (47). இவருக்கு ராம்நாத் குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், தாயார் தனது மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது தாய் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இளைய மகன், தீபக்கிற்கு தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்ப்பதற்குள் தாயார் இறந்ததுவிட்டது தெரியவந்தது.
நேரில் பார்த்தபோது, தாயாரின் கழுத்தில் காயமும், இடது கை கட்டைவிரலில் மை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் இல்லாததால், சந்தேகமடைந்த தீபக், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அண்ணன்தான் அதற்குக் காரணம் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், கமலாபாய் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. பின்னர் மூத்த மகனை விசாரித்த போது உண்மையை ஒப்புக் கொண்டார்.
ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக ராம்நாத், தனது தாயிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். தாய் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராம்நாத், அவரது கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதனயைடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். ஸ்மார்ட் போனுக்காக தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.