நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் தொடரும் மர்மம்... சிக்கியது டார்ச்லைட்!

ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்
Updated on
2 min read

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் விலகாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து டார்ச் லைட் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெல்லை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ம் தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் எம் எல் ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்
உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்

அவர் இறந்து கிடந்த தோட்டத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமாரின் உடல் கண்டறியப்பட்ட தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள அனைத்துப் பொருட்களையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவரது இரண்டு செல்போன்கள் குறித்து எந்த தகவல்களும் கிடைக்காததால் அவற்றை தேடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் 4 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றுத் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 17 மணி நேரமாக அந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து நேற்று கத்தி ஒன்று மீட்கப்பட்டது. அந்த கத்தியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஜெயக்குமார் தோட்டம்
ஜெயக்குமார் தோட்டம்

இந்த சூழலில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2 ஆம் தேதி டார்ச் லைட் வாங்கிச் செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

இதனையடுத்து ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுத்த இடத்தில் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். அப்போது டார்ச் லைட் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த டார்ச் ஜெயக்குமார் தனசிங் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் வாங்கிய டார்ச் லைட்டின் பாகங்களா என விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே சமயம் கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in