பகீர்... காதலியின் தந்தை என நினைத்து முதியவர் கொலை; ஆள்மாறாட்டத்தால் இளைஞர்கள் வெறிச்செயல்!

பகீர்... காதலியின் தந்தை என நினைத்து முதியவர் கொலை; ஆள்மாறாட்டத்தால் இளைஞர்கள் வெறிச்செயல்!

மதுரையில் காதல் விவகாரத்தில் காதலியின் தந்தை என கருதி ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கரிமேட்டிலுள்ள யோகனந்தசுவாமி தெற்கு மடம், நல்லமாயன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொங்குடி (65). இவர் தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த இரண்டுபேர் அவரது மனைவி பாண்டியம்மாள் கண்முன் பொங்குடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இது தொடர்பாக கரிமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மதுரை காளவாசல் எச்எம்எஸ் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்தமிழன் என்பவர் காதலியின் தந்தையை கொல்ல வந்தபோது, ஆள் மாற்றி பொங்குடியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தமிழன் (19), அவரது நண்பர் கோச்சடை சரவணப் பாண்டி மகன் அருணாச்சலம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: "நல்லமாயன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை முத்தமிழன் காதலித்துள்ளார். அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் சகோதரரும் முத்தமிழனை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் தனது நண்பரான அருணாச்சலத்தை அழைத்துக் கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றபோது, முதலில் அருணாச்சலத்தை அனுப்பி, வீட்டில் யார் இருக்கிறார்கள் என, பார்த்துவரும்படி கூறியுள்ளார்.

வீட்டில் அவரது தந்தை இருப்பதாக அருணாச்சலம் கூறியதால் இருவரும் திடீரென வீட்டுக்குள் புகுந்து தனது காதலியின் தந்தை என, நினைத்து பொங்குடியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் தேடி வந்த நபர் அதே பகுதியிலுள்ள மாடி வீடு ஒன்றில் வசித்தது அவர்களுக்கு தெரியாமல் ஆளை மாற்றி கொலை செய்தது பிறகு தெரிந்தது. காதல் விவகாரத்தில் நடந்த இச்சம்பவத்தில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in