அதிர்ச்சி... ரயிலில் பாய்ந்து தாய், மகன் சாவு?.. நீடாமங்கலம் அருகே பரபரப்பு!

ரயில்
ரயில்

நீடாமங்கலம் அருகே  ரயிலில் அடிபட்டு பெண்ணும் அவரது ஒரு வயது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் இன்னொரு மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வடக்கு மடவிளாகம் தெருவைச் சோந்த தினகரன் மகள் ராதிகா (25). இவருக்கும், ஆதனூா் மண்டபம் கீழத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் சற்குணம் (28) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ராம்சரன் (1), சாய்ரட்ஷன் (1) என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். சற்குணம் வடமாநிலத்தில் உள்ள காற்றாலை நிறுவனம்  ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இதனால் ராதிகா ஆதனூா் மண்டபத்தில் உள்ள தனது கணவா் வீட்டில்  குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராதிகாவும், அவரது மகன் சாய்ரட்ஷனும் நேற்று மாலை அவ்வழியாக காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். மற்றொரு குழந்தை ராம்சரன் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இதைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையறிந்து சமபவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் ராம்சரனை மீட்டு  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் அங்கிருந்து  தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ராதிகா, சாய்ரட்ஷன் ஆகியோரின் உடல்களை  பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  ராதிகா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் ரயிலில் பாய்ந்தாரா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மன்னார்குடி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in