
ஒடிசாவில் இளம்பெண், அவரது மகள், மகன் ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் இன்று போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
ஒடிசா மாநிலம், சம்பல்பூரின் தனுபாலி காவல் எல்லைக்குட்பட்ட சுனாபாலி நகரைச் சேர்ந்தவர் சஜியா பர்வீன். இவருக்கு அப்துல் ரஹ்மான்(8) என்ற மகனும், ஹுமேரா தயிபா(6) என்ற மகளும் இருந்தனர். சஜியாவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனது இரண்டு குழந்தைகளுடன் சஜியா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், இவரது வீட்டில் இருந்து இன்று துர்நாற்றம் அதிகமாக வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், தனுபாலி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாஜிஸ்திரேட் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு அழுகிய நிலையில் சஜியா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்கள் கிடந்தன. இதையடுத்து மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சஜியா மற்றும் அவரது குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் விசாரித்த போது, சஜியா வீட்டிற்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து சென்றது தெரிய வந்தது. தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது.
ஜார்க்கண்டைச் சேர்ந்த சஜியாவின் தாய் கூறுகையில்," கடந்த நான்கு நாட்களாக தொலைபேசி அணைக்கப்பட்டதால் சஜியாவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இங்கு வந்த பார்த்த பிறகு தான் அவர்கள் இறந்து கிடந்ததைக் கண்டோம்" என்றார். தாய், இரண்டு குழந்தைகள் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.