சித்தியுடன் தகாத உறவு; கண்டித்த அத்தையை கொலை செய்த மருமகன் - நீதிமன்றம் விதித்த தண்டனை என்ன?
சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததை தட்டிகேட்ட அத்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது சித்தியுடன் தகாத உறவில் இருந்த நிலையில், சித்தி மற்றும் அவரது வாரிசுகளுடன் வசித்துவந்தார். இதை அவரது அத்தை குணசுந்தரி என்பவர் தட்டிக்கேட்டதுடன், கணேஷுக்கு கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டுள்ளார்.
சித்தியுடனான உறவிற்கு இடைஞ்சலாக இருப்பதோடு, கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த கணேஷ் அத்தையை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக, கணேஷ் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாரூக் முன்பு நடந்தது. இதில் காவல் துறை மற்றும் குற்றம்சாட்டப்பட்ட கணேஷ் ஆகியோரது தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் கணேஷ் அவரது அத்தை குணசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி கூறினார். இதனையடுத்து, கணேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.