காதல் ஜோடிகளிடம் கைவரிசை காட்டிவந்த போலி காவலர் கைது

காதல் ஜோடிகளிடம் கைவரிசை காட்டிவந்த போலி காவலர் கைது

தான் ஒரு காவலர் எனக் கூறி, காதல் ஜோடிகளை மிரட்டி தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டுவந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

வழிப்பறித் திருடர்கள் பலவிதம். அதில் கடலூரைச் சேர்ந்த சிவராமன்(40) சற்றே வித்தியாசமானவர். போலீஸ் எனக்கூறி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுபவர். முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சிவராமன் அங்கு தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகளிடம் தன்னை ஒரு காவலர் எனச் சொல்லி விசாரிப்பார். ‘உங்கள் பெற்றோருக்கு போன் செய்துகொடுங்கள். உங்கள் காதலையும், வெளியில் ஊர் சுற்றுவதையும் அம்பலப்படுத்துகிறேன்’ என அவர்களை மிரட்டவும் செய்வார்.

அஞ்சி நடுங்கும் ஜோடிகளிடம் அடுத்ததாக பேரம் பேசுவார். தன்னை உரிய முறையில் கவனித்துக்கொண்டால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகச் சொல்லி அவர்களிடம் நகை, பணத்தைப் பறிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அண்மையில் சிவராமன் ஒரு காதல் ஜோடியை இதே பாணியில் மிரட்டியிருக்கிறார். இதுகுறித்து சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் காதலர்கள் இருவரும் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவுசெய்த போலீஸார் சிவராமனை வலைவீசித் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 25 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in