எல்டிடிஈ ஆதரவாளர், கடத்தல் கும்பலின் ரூ.3.93 கோடி சொத்துக்கள் முடக்கம்

அமலாக்கத் துறை நடவடிக்கை
எல்டிடிஈ ஆதரவாளர், கடத்தல் கும்பலின் ரூ.3.93 கோடி சொத்துக்கள் முடக்கம்

விடுதலைப்புலிகள் ஆதரவாகவும், ஹெராயின் மற்றும் ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் தொடர்புடைய 3.93 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் கப்பல் மூலமாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு கடந்த மே மாதம் ஆயுததடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுரேஷ், ரமேஷ் மற்றும் சௌந்திரராஜன் ஆகிய மூவர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தினர்.

குறிப்பாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழரான சத்குணம் (எ) சபேசன் வீட்டில் நடத்திய சோதனையில் விடுதலை இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம்கார்டுகள், டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யபட்டது. இவரிடம் நடத்திய் விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்த உடந்தையாக செயல்பட்டதும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்ட ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சத்குணம், ரமேஷ், சுரேஷ், சௌந்திரராஜன் ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டு சேர்த்த 3.59 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். ஆறு நிலம் தொடர்பான ஆவணங்கள், 12 வாகனங்கள், ரொக்கம் மற்றும் வங்கி வைப்பு நிதி என மொத்தம் 3.59 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in