100 சவரன் நகைகள் பறிமுதல்! பிரணவ் ஜூவல்லர்ஸ் ஓனர், மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பிரணவ் ஜூவல்லர்ஸ் ஓனர்
பிரணவ் ஜூவல்லர்ஸ் ஓனர்

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் 100 சவரன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லர்ஸ் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா பதவி வகித்து வந்தனர். மேலும் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2% வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்டது. இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12ம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்திருந்தது.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜூவல்லர்ஸ் அனைத்து நகைக்கடைகளையும் எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென மூடியதுடன் அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக 11 கிளைகளில் பெரும்பாலான இடங்களில் போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பொதுமக்களை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுவரை இந்நிறுவனம் 50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் மோசடி தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in