
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றிய ஐயப்பன் என்பவரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது சகோதரர் தனபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பன் என்பவரிடம் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி ஐயப்பன் விளக்கம் அளித்து வருகிறார்.
இது தொடர்பாக ஐயப்பன் கூறும் போது, உதகையில் உள்ள தனிப்படை போலிஸார் என்னிடம் விசாரணை செய்துள்ளதாகவும் தற்போது 2வது முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.