
பெரம்பலூர் அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவரது மனைவி பிரவீனா(24). ராஜ்குமார் பிரவீனாவின் சொந்த அத்தை மகன் ஆவார். இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில், 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார், பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், பிரவீனா பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். ராஜ்குமாருக்கு பணியாற்றும் இடத்தின் அருகிலேயே ஒரு பெண்ணிற்கும் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணோடு ராஜ்குமார் அடிக்கடி ஊர் சுற்றி வந்தததாகவும் 2 முறை மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் ராஜ்குமாருக்கு அறிவுரை கூறி குடும்பத்துடன் சேர்த்து வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்திடம் இரவு பணிக்கு செல்வதாக கிளம்பிய ராஜ்குமார், மனைவியை உறவினர் வீட்டில் விட்டு செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் வழிமறித்து இருவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் கையில் வெட்டுப்பட்ட நிலையில், உறவினர்களுக்கு செல்போன் மூலம் ராஜ்குமார் தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது, பிரவீனா கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். தங்களை மர்மநபர்கள் வெட்டிவிட்டு ஓடி விட்டதாக ராஜ்குமார் கூறியது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்திய போது, ராஜ்குமார் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்ற நாய் அவரை கவ்வி பிடித்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து விசாரரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த ராஜ்குமார், பின்னர் போலீஸாரின் தொடர் விசாரணையில் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
திருமணத்தை மீறிய தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை ஆள் வைத்து தானே வெட்டிக் கொலை செய்ததாகவும், சந்தேகம் வராமல் இருக்க கையில் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீஸார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு