வீடு தேடுபவர்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய ஹைடெக் ஆசாமி!

ரூ. 11 லட்சம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்றது அம்பலம்
புஷ்பராஜ்
புஷ்பராஜ்

சென்னை, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திக் (40). இவர் கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் கார்த்திக் தினமும் குரோம்பேட்டையிலிருந்து செல்வது சிரமமென்பதால், கொளத்தூர் அருகே வாடகைக்கு வீடு இணையதளம் மூலமாகத் தேடினார்.

மருத்துவர் கார்த்திக் வீடு தேடுவதை அறிந்து, அடையாளம் தெரியாத நபர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள நியூரி டவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு இருப்பதாக தெரிவித்ததுடன், வாட்ஸ் ஆப் மூலமாக வீட்டின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் தன்னை வீட்டின் உரிமையாளர் என்று கூறினார். தான் தற்போது வெளியில் இருப்பதால், அட்வான்ஸ் பணம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு வாடகை குறித்த ஒப்பந்தப்பத்திரத்தையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார்.

இதை நம்பிய மருத்துவர் கார்த்திக், அவரது வங்கி கணக்குக்கு 5 தவணையாக ரூ. 57 ஆயிரம் செலுத்திய பின்னர், அந்த வீட்டில் குடியேறுவதற்காக அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கார்த்திக், அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேரடியாகச் சென்று விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கார்த்திக் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரானது அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சைபர் கிரைம் போலீசார் மோசடி நடந்த வங்கிக் கணக்கை வைத்து விசாரணை செய்தபோது, அது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராஜ்(34) என தெரியவந்தது.

அங்குசென்ற தனிப்படை போலீசார் புஷ்பராஜ் சொந்த ஊரில் இல்லாததால், அவரது செல்போன் எண் டவரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வடபழனியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும், 2 செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.

மேலும் ஓ.எல்.எக்ஸ், nobroker.com போன்ற ஆன்லைன் வெப்சைட்களில் வீடு வாடகைக்குத் தேவைப்படுபவர்களின் எண்களைச் சேகரித்துள்ளார். மற்ற இணையதளங்களில் வீடு வாடகைக்கு உள்ள விளம்பரங்களை எடுத்து, அதை nobroker.com என்ற இணையதளம் மூலமாக வீடு வாடகைக்கு உள்ளதாகக் கூறி பதிவேற்றி, இவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். அதில் தொடர்பு கொள்பவர்களுக்குப் போலியாக வாடகை ஒப்பந்தப்பத்திரம் தயார் செய்து கொடுத்து, வங்கி மூலமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கொரட்டூரில் வீடு வாடகைக்குத் தேவை என்று தேடியபோது இவரிடம் சிக்கி ரூ.8.5 லட்சத்தை இழந்துள்ளார்.

இதேபோன்று, சென்னையில் பல்வேறு நபர்களிடம் மோசடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்த பணத்தில், ஆன் லைன் ரம்மியில் ரூ.11 லட்சத்தை இழந்துள்ளதுள்ளார் புஷ்பராஜ்.

லண்டனில் எம்.எஸ். கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் முடித்துவிட்டு, சென்னையில் சிலகாலம் இதேபோன்று இணையதளத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் போதிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், ஏற்கெனவே பணி செய்த அந்த அனுபவத்தை வைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

இணையதளம் மூலமாக வீடு வாடகைக்குத் தேடுபவர்கள், நேரடியாகச் சென்று வீட்டைப் பார்த்து பணத்தை நேரடியாகச் செலுத்த வேண்டுமென்றும், அதேபோல் வீட்டு உரிமையாளர்களும் ஜாக்கிரதையாக இருக்குமாறும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in