ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி... தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார் குஜராத் முதல்வர்!

ராஜ்கோட் தீ விபத்து
ராஜ்கோட் தீ விபத்து

"ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்" என, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் டிஆர்பி என்ற பெயரில் கேம் ஜோன் ஒன்று செயல்பட்டு வந்தது. நான்காண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விளையாட்டு மைதானம் இரண்டடுக்குகளை கொண்டது. தற்காலிக இரும்பு சட்டங்களை கொண்டு இந்த விளையாட்டு மைதானத்தை இதன் நிறுவனர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது அதில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இந்த விளையாட்டு மையத்தில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. 99 ரூபாய் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான பொதுமக்கள் இங்கு விளையாடுவதற்காக வருகை தந்திருந்தனர். அந்த மையத்தின் அருகிலேயே மேம்பாட்டு பணிக்காக வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியத் துவங்கியுள்ளது. சற்று நேரத்தில் மொத்த மையமும் தீப்பற்றி எரிந்ததில், உள்ளே சிக்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

ராஜ்கோட் தீ விபத்து
ராஜ்கோட் தீ விபத்து

இருப்பினும் பலர் தீயில் சிக்கிக் கொண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று காலை வரை 33 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், அதில் 9 பேர் குழந்தைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து இருப்பதால் அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கோட் தீ விபத்து
ராஜ்கோட் தீ விபத்து

மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தீத்தடுப்பு அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in