சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றில் பெயர் மாற்றம் செய்யக்கோரி 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வருவாய்த்துறை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது சொத்துகளை தனது மகன்கள் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றில் பெயர் மாற்றம் செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவை அனுப்பியுள்ளார். அங்கு பணி செய்யும் ஊழியர் ரேணுகா என்பவர் பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுந்தர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை ஆலடி தோப்பு தெருவில் ஆய்வுப்பணியில் இருந்த ரேணுகாவை சந்தித்து சுந்தர் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரேணுகாவை கைது செய்தனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.