ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்ற இளைஞர்: தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்ற இளைஞர்: தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்ற சம்பவத்தில், அந்த இளைஞர் மீது பெண்ணின் பெற்றோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சி.எல்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் வாணி என்பவர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் திருநாவுக்கரசு என்பவரால் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்திருந்தார்.

காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திருநாவுக்கரசின் பெற்றோர் அந்த சிறுமியைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தலைமறைவானார்.

இதையடுத்து திருநாவுக்கரசின் பெற்றோரை காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் காவல் நிலையம் வந்த திருநாவுக்கரசு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரை விசாரணை செய்ததால் திருநாவுக்கரசு தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வாணியம்பாடியில் சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரசு, வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in