முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது பாய்ந்தது வழக்கு: நடிகர் சூரி வழக்கில் அடுத்த நகர்வு

முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது பாய்ந்தது வழக்கு: நடிகர் சூரி வழக்கில் அடுத்த நகர்வு

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

பின்னர் இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி 2 முறை இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஆஜராகினார். அப்போது, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் மோசடி தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையை தொடர்ந்து நடிகர் விஷ்ணு வாஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடையாறு காவல் நிலையத்தில் ஏற்கெனவே பதிவு செய்த வழக்கை, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மறு வழக்காக பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகிய இருவருக்கும் மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அளித்து அவர்களை நேரில் வரவழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தவுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in