முதுநிலை நீட் தேர்வுக்குத் தயாரான பெண் மருத்துவர் திடீர் தற்கொலை: திருமணம் நடந்த 6 மாதத்தில் சோகம்!

முதுநிலை நீட் தேர்வுக்குத் தயாரான பெண் மருத்துவர் திடீர் தற்கொலை: திருமணம் நடந்த  6 மாதத்தில் சோகம்!

மேல்படிப்பிற்காக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த பெண் மருத்துவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருக்கும் ராசி(27) என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்களாகிறது. ராசி கடந்த 2020-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.


மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு ராசி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாக ராசி சென்றார். அவர் நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாய் மருத்துவர் செந்தாமரை மாடிக்குச் சென்று பார்த்தார். ஆனால், அறை உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தாமரை, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து
விரைந்து வந்த போலீஸார், அறைக்கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 6 வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தேர்வு அச்சம் காரணமாக ராசி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in