
பஞ்சாபில் விவசாய கழிவுகளை தீவைத்து எரிக்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற அதிகாரிகளை, விவசாயிகள் கூட்டமாக சேர்ந்து கட்டாயப்படுத்தி கழிவுகளுக்கு தீ வைக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில், பயிர் அறுவடைக்கு பிறகு மீதமாகும் விவசாய கழிவுகளை தீவைத்து எரிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புகை மற்றும் கடுமையான காற்று மாசு ஆகியவை ஏற்படுகிறது. எனவே இதனை நிறுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகள் சிலர் பதிண்டா மாவட்டத்தில் உள்ள மெஹ்மா சர்ஜா கிராமத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு, விவசாயிகள் சிலர், விவசாய கழிவுகளை எரித்துக்கொண்டிருந்ததால் அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது கூட்டமாக கூடிய விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, அவர்களிடம் வாக்குவாதமும் செய்தனர். தொடர்ந்து ஹர்பிரீத் சிங் என்ற அதிகாரியின் கையில் தீப்பெட்டியை கொடுத்து வலுக்கட்டாயமாக விவசாய கழிவுகளுக்கு தீவைக்க வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், வீடியோவில் உள்ள விவசாயிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!