
சிட்பண்ட் வழக்குத் தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண 15 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக அமலாக்க இயக்குநரக அதிகாரி மற்றும் அவரது கூட்டாளி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் வழக்கை தீர்ப்பதற்கு அமலாக்க இயக்குநரக அதிகாரி நேவல் கிஷோர் என்பவரை ஒருவர் அணுகியுள்ளார். அப்பிரச்சினையைத் தீக்க நேவல் கிஷோர், ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் 15 லட்ச ரூபாய் தந்தால் வழக்கை தீர்த்து வைக்கிறேன் என்று அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி நேவல் கிஷோருக்கு 15 லட்சம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் தர ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள விமல்புராவில் வசிக்கும் அமலாக்கத்துறை அதிகாரி நேவல் கிஷோர் மீனா மற்றும் அவரது கூட்டாளி பாபுலால் மீனா ஆகிய இருவரும் 15 லட்ச ரூபாயை நேற்று லஞ்சமாக வாங்கும் போது கையும், களவுமாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.
இதனால் நேவல் கிஷோரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அவர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
லஞ்சம் வாங்கும் போது அமலாக்கத்துறை அதிகாரியே கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.