
அருப்புக்கோட்டையில் வீட்டில் தொடர்ந்து சண்டை போட்டு வந்த தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியை சேர்ந்த கணபதி என்பவருக்கு சரவணகுமார் (24), ராஜா(21), சசிகுமார் (18) என மூன்று மகன்கள். இவர்களில் சரவணகுமாருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சசிகுமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சசிகுமாருக்கும், அவரது அண்ணன் சரவணகுமாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது தெரியவந்தது.
எனவே சந்தேகத்தின் அடிப்படையில் சரவணகுமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது தம்பியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
சசிகுமார் தினமும் மது அருந்திவிட்டு சரவணகுமார் உடன் சண்டை போட்டு வந்ததாலும், எனவே ஆத்திரம் அடைந்த அவரது மனைவி குடும்பம் நடத்த முடியாமல் மூன்று மாதங்களுக்கு முன் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் சரவணகுமார் தம்பி மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் சசிகுமார் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது அவரது வாயை மூடி கழுத்தை அறுத்துள்ளார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை அடுத்த போலீஸார் சரவணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.